சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப் பண் - தக்கராகம் (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுரர் வண்டார்குழலியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=AweGz-Ek-Iw |
4.068
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெள்ள நீர்ச் சடையர் போலும்; பண் - திருநேரிசை (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=TwKXKMpMV4I |
6.078
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் பண் - திருத்தாண்டகம் (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=jqqWSyfJW3w |
7.052
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
முத்தா! முத்தி தர வல்ல பண் - பழம்பஞ்சுரம் (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்துவதாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை) |
11.002
காரைக்கால் அம்மையார்
திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1
திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம் பண் - (திருவாலங்காடு (பழையனூர்) ) Audio: https://sivaya.org/audio/11.02 Thiru Aalangadu Mootha Thirupathigam.m4a |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.045  
துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப்
பண் - தக்கராகம் (திருத்தலம் திருவாலங்காடு (பழையனூர்) ; (திருத்தலம் அருள்தரு வண்டார்குழலியம்மை உடனுறை அருள்மிகு ஊர்த்ததாண்டவேசுரர் திருவடிகள் போற்றி )
திருவோத்தூரிலிருந்து புறப்பட்டு ஞானசம்பந்தர் திருமாகறல் குரங்கணில் முட்டம் ஆகிய தலங்களை வணங்கிக் காஞ்சிபுரம் சென்றடைந்தார். கச்சி ஏகம்பம் , காம கோட்டம் ஆகிய ஆலயங்களை வணங்கிக் கொண்டு அத்தலத்தின் அருகில் விளங்கும், ஆலயங் களைப் போற்றிக் காரைக்காலம்மையார் முத்திப் பேறு பெற்றருளிய திருவாலங்காட்டை வணங்கிப் போற்ற எண்ணினார். அம்மையார் தலையால் நடந்து வந்த அத்தலத்தை மிதித்தற்கு அஞ்சி அத்தலத்தின் அருகில் உள்ளதொரு ஊரில் அன்றிரவு துயில் கொண்டார். ஆலங் காட்டு இறைவர் அவர் கனவில் தோன்றி நம்மைப் பாடுதற்கு மறந்தனையோ என்ன உடனெழுந்து துஞ்சவருவாரும் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப் போய் நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனை நட்பு ஆய் வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு, அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே. | [1] |
கேடும் பிறவியும் ஆக்கினாரும், கேடு இலா வீடுமாநெறி விளம்பினார், எம் விகிர்தனார் காடும் சுடலையும் கைக்கொண்டு, எல்லிக் கணப்பேயோடு ஆடும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே. | [2] |
கந்தம் கமழ் கொன்றைக் கண்ணி சூடி, கனல் ஆடி, வெந்தபொடி-நீற்றை விளங்கப் பூசும் விகிர்தனார் கொந்து அண் பொழில்-சோலை அரவின் தோன்றிக் கோடல் பூத்த, அம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே. | [3] |
பாலமதி சென்னி படரச் சூடி, பழி ஓராக் காலன் உயிர் செற்ற காலன் ஆய கருத்தனார் கோலம் பொழில்-சோலைப் பெடையோடு ஆடி மடமஞ்ஞை ஆலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே. | [4] |
ஈர்க்கும் புனல் சூடி, இளவெண் திங்கள் முதிரவே பார்க்கும் அரவம் பூண்டு ஆடி, வேடம் பயின்றாரும் கார்க் கொள் கொடி முல்லை குருந்தம் ஏறி, கருந்தேன் மொய்த்து, ஆர்க்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே. | [5] |
பறையும் சிறு குழலும் யாழும் தம் பயிற்றவே, மறையும் பல பாடி, மயானத்து உறையும் மைந்தனார், பிறையும் பெரும்புனல் சேர் சடையினாரும் பேடைவண்டு அறையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே. | [6] |
நுணங்குமறை பாடி ஆடி வேடம் பயின்றாரும், இணங்கும் மலைமகளோடு இரு கூறு ஒன்று ஆய் இசைந்தாரும் வணங்கும் சிறுத்தொண்டர் வைகல் ஏத்தும் வாழ்த்தும் கேட்டு, அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே. | [7] |
கணையும் வரிசிலையும் எரியும் கூடிக் கவர்ந்து உண்ண, இணை இல் எயில் மூன்றும் எரித்திட்டார், எம் இறைவனார் பிணையும் சிறுமறியும் கலையும் எல்லாம் கங்குல் சேர்ந்து அணையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே. | [8] |
கவிழ மலை, தரளக் கடகக் கையால் எடுத்தான் தோள் பவழ நுனிவிரலால் பைய ஊன்றிப் பரிந்தாரும் தவழும் கொடிமுல்லை புறவம் சேர நறவம் பூத்து அவிழும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே. | [9] |
பகலும் இரவும் சேர் பண்பினாரும், நண்பு ஓராது இகலும் இருவர்க்கும் எரி ஆய்த் தோன்றி நிமிர்ந்தாரும் புகலும் வழிபாடு வல்லார்க்கு என்றும் தீய போய் அகலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே. | [10] |
போழம்பல பேசிப் போது சாற்றித் திரிவாரும், வேழம் வரும் அளவும் வெயிலே துற்றித் திரிவாரும், கேழல் வினை போகக் கேட்பிப்பாரும்; கேடு இலா ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே. | [11] |
சாந்தம் கமழ் மறுகில் சண்பை ஞானசம்பந்தன் ஆம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளை, வேந்தன் அருளாலே, விரித்த, பாடல் இவை வல்லார் சேர்ந்த இடம் எல்லாம் தீர்த்தம் ஆகச் சேர்வாரே. | [12] |
Back to Top
காரைக்கால் அம்மையார் திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1
11.002  
திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்
பண் - (திருத்தலம் திருவாலங்காடு (பழையனூர்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப் பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய் தங்கி யலறி யுலறு காட்டில் தாழ்சடை எட்டுத் திசையும் வீசி அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள் அப்ப னிடந்திரு ஆலங் காடே. | [1] |
கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக் கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை விள்ள எழுதி வெடுவெ டென்ன நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத் துள்ளிச் சுடலைச் சுடுபி ணத்தீச் சுட்டிய முற்றும் சுளிந்து பூழ்தி அள்ளி அவிக்கநின் றாடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங்காடே. | [2] |
வாகை விரிந்துவெள் நெற்றொ லிப்ப மயங்கிருள் கூர்நடு நாளை ஆங்கே கூகையொ டாண்டலை பாட ஆந்தை கோடதன் மேற்குதித் தோட வீசி ஈகை படர்தொடர் கள்ளி நீழல் ஈமம் இடுசுடு காட்ட கத்தே ஆகம் குளிர்ந்தன லாடும் எங்கள் அப்ப னிடம் திரு ஆலங் காடே. | [3] |
குண்டில்ஓ மக்குழிச் சோற்றை வாங்கிக் குறுநரி தின்ன அதனை முன்னே கண்டிலோம் என்று கனன்று பேய்கள் கையடித் தொ டிடு காட ரங்கா மண்டலம் நின்றங் குளாளம் இட்டு, வாதித்து, வீசி எடுத்த பாதம் அண்டம் உறநிமிர்ந் தாடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே. | [4] |
விழுது நிணத்தை விழுங்கி யிட்டு, வெண்தலை மாலை விரவப் பூட்டிக் கழுதுதன் பிள்ளையைக் காளி யென்று பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப் புழதி துடைத்து, முலைகொ டுத்துப் போயின தாயை வரவு காணா தழுதுறங் கும்புறங் காட்டில் ஆடும் அப்ப னிடம்திரு ஆலங் கா டே | [5] |
பட்டடி நெட்டுகிர்ப் பாறு காற்பேய் பருந்தொடு, கூகை, பகண்டை , ஆந்தை குட்டி யிட, முட்டை, கூகைப் பேய்கள் குறுநரி சென்றணங் காடு காட்டில் பிட்டடித் துப்புறங் காட்டில் இட்ட பிணத்தினைப் பேரப் புரட்டி ஆங்கே அட்டமே பாயநின் றாடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே. | [6] |
கழலும் அழல்விழிக் கொள்ளி வாய்ப்பேய் சூழ்ந்து துணங்கையிட் டோடி, ஆடித் தழலுள் எரியும் பிணத்தை வாங்கித் தான் தடி தின்றணங் காடு காட்டில் கழலொலி, ஓசைச் சிலம்பொ லிப்பக் காலுயர் வட்டணை யிட்டு நட்டம் அழலுமிழ்ந் தோரி கதிக்க ஆடும் அப்ப னிடம்திரு ஆலங் காடே. | [7] |
நாடும், நகரும் திரிந்து சென்று, நன்னெறி நாடி நயந்தவரை மூடி முதுபிணத் திட்ட மாடே, முன்னிய பேய்க்கணம் சூழச் சூழக் காடும், கடலும், மலையும், மண்ணும், விண்ணும் சுழல அனல்கையேந்தி ஆடும் அரவப் புயங்கன் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே. | [8] |
துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச் சச்சரி, கொக்கரை, தக்கை யோடு, தகுணிதம் துந்துபி தாளம் வீணை மத்தளம் கரடிகை வன்கை மென்தோல் தமருகம், குடமுழா, மொந்தை வாசித் தத்தனை விரவினோ டாடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே. | [9] |
புந்தி கலங்கி, மதிம யங்கி இறந்தவ ரைப்புறங் காட்டில் இட்டுச் சந்தியில் வைத்துக் கடமை செய்து தக்கவர் இட்டசெந் தீவி ளக்கா முந்தி அமரர் முழவி னோசை திசைகது வச்சிலம் பார்க்க ஆர்க்க, அந்தியின் மாநடம் ஆடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே. | [10] |
ஒப்பினை யில்லவன் பேய்கள் கூடி, ஒன்றினை ஒன்றடித் தொக்க லித்து, பப்பினை யிட்டுப் பகண்டை பாட, பாடிருந் தந்நரி யாழ மைப்ப, அப்பனை அணிதிரு ஆலங் காட்டெம் அடிகளைச் செடிதலைக் காரைக் காற்பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்தின்பம் எய்து வாரே. | [11] |
எட்டி இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும் சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கௌவப் பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய் கொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே. | [12] |
நிணந்தான் உருகி நிலந்தான் நனைப்ப நெடும்பற் குழிகட்பேய் துணங்கை யெறிந்து சூழும் நோக்கிச்சுடலை நவிழ்த் தெங்கும் கணங்கள் கூடிப் பிணங்கள் மாந்திக் களித்த மனத்தவாய் அணங்கு காட்டில் அனல்கை யேந்தி அழகன் ஆடுமே. | [13] |
புட்கள் பொதுத்த புலால்வெண் தலையைப் புறமே நரிகவ்வ அட்கென் றழைப்ப ஆந்தை வீச அருகே சிறுகூகை உட்க விழிக்க ஊமன் வெருட்ட ஓரி கதித்தெங்கும் பிட்க நட்டம் பேணும் இறைவன் பெயரும் பெருங்காடே. | [14] |
செத்த பிணத்தைத் தெளியா தொருபேய் சென்று விரல்சுட்டிக் கத்தி உறுமிக் கனல்விட் டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப் பத்தல் வயிற்றைப் பதைக்க மோதிப் பலபேய் இரிந்தோடப் பித்த வேடங் கொண்டு நட்டம் பெருமான் ஆடுமே. | [15] |
முள்ளி தீந்து முளரி கருகி மூளை சொரிந்துக்குக் கள்ளி வற்றி வெள்ளில் பிறங்கு கடுவெங் காட்டுள்ளே புள்ளி உழைமான் தோலொன் றுடுத்துப் புலித்தோல் பியற்கிட்டுப் பள்ளி யிடமும் அதுவே ஆகப் பரமன் ஆடுமே. | [16] |
வாளைக் கிளர வளைவாள் எயிற்று வண்ணச் சிறுகூகை மூளைத் தலையும் பிணமும் விழுங்கி முரலும் முதுகாட்டில் தாளிப் பனையின் இலைபோல் மயிர்க்கட் டழல்வாய் அழல்கட்பேய் கூளிக் கணங்கள் குழலோ டியம்பக் குழகன் ஆடுமே. | [17] |
நொந்திக் கிடந்த சுடலை தடவி நுகரும் புழுக்கின்றிச் சிந்தித் திருந்தங் குறங்குஞ் சிறுபேய் சிரமப் படுகாட்டின் முந்தி அமரர் முழவின் ஒசை முறைமை வழுவாமே அந்தி நிருத்தம் அனல்கை யேந்தி அழகன் ஆடுமே. | [18] |
வேய்கள் ஓங்கி வெண்முத் துதிர வெடிகொள் சுடலையுள் ஒயும் உருவில் உலறு கூந்தல் அலறு பகுவாய பேய்கள் கூடிப் பிணங்கள் மாந்தி அணங்கும் பெருங்காட்டில் மாயன் ஆட மலையான் மகளும் மருண்டு நோக்குமே. | [19] |
கடுவன் உகளுங் கழைசூழ் பொதும்பிற் கழுகும் பேயுமாய் இடுவெண் டலையும் ஈமப் புகையும் எழுந்த பெருங்காட்டில் கொடுவெண் மழுவும் பிறையுந் ததும்பக் கொள்ளென் றிசைபாடப் படுவெண் துடியும் பறையுங் கறங்கப் பரமன் ஆடுமே. | [20] |
குண்டை வயிற்றுக் குறிய சிறிய நெடிய பிறங்கற்பேய் இண்டு படர்ந்த இருள்சூழ் மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய் கொண்டு குழவி தடவி வெருட்டிக் கொள்ளென் றிசைபாட மிண்டி மிளிர்ந்த சடைகள் தாழ விமலன் ஆடுமே. | [21] |
சூடும் மதியம் சடைமேல் உடையார் சுழல்வார் திருநட்டம் ஆடும் அரவம் அரையில் ஆர்த்த அடிகள் அருளாலே காடு மலிந்த கனல்வாய் எயிற்றுக் காரைக் காற்பேய்தன் பாடல் பத்தும் பாடி யாடப் பாவம் நாசமே. | [22] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.068  
வெள்ள நீர்ச் சடையர் போலும்;
பண் - திருநேரிசை (திருத்தலம் திருவாலங்காடு (பழையனூர்) ; (திருத்தலம் அருள்தரு வண்டார்குழலியம்மை உடனுறை அருள்மிகு ஊர்த்ததாண்டவேசுவரர் திருவடிகள் போற்றி )
வெள்ள நீர்ச் சடையர் போலும்; விரும்புவார்க்கு எளியர் போலும்; உள்ளுளே உருகி நின்று அங்கு உகப்பவர்க்கு அன்பர் போலும்; கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு அறுத்திடுவர் போலும்- அள்ளல் அம் பழனை மேய ஆலங்காட்டு அடிகளாரே. | [1] |
செந்தழல் உருவர் போலும்; சின விடை உடையர் போலும்; வெந்த வெண் நீறு கொண்டு மெய்க்கு அணிந்திடுவர் போலும்; மந்தம் ஆம் பொழில் பழ(ந்)னை மல்கிய வள்ளல் போலும்; அந்தம் இல் அடிகள் போலும்-ஆலங்காட்டு அடிகளாரே. | [2] |
கண்ணினால் காமவேளைக் கனல் எழ விழிப்பர் போலும்; எண் இலார் புரங்கள் மூன்றும் எரியுணச் சிரிப்பர் போலும்; பண்ணின் ஆர் முழவம் ஓவாப் பைம்பொழில் பழனை மேய அண்ணலார்-எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே. | [3] |
காறிடு விடத்தை உண்ட கண்டர்; எண் தோளர் போலும்; தூறு இடு சுடலை தன்னில் சுண்ண வெண் நீற்றர் போலும்; கூறு இடும் உருவர் போலும்; குளிர் பொழில் பழனை மேய ஆறு இடு சடையர் போலும்-ஆலங்காட்டு அடிகளாரே. | [4] |
பார்த்தனோடு அமர் பொரூது பத்திமை காண்பர் போலும்; கூர்த்த வாய் அம்பு கோத்துக் குணங்களை அறிவர் போலும்; பேர்த்தும் ஓர் ஆவநாழி அம்பொடும் கொடுப்பர் போலும்- தீர்த்தம் ஆம் பழனை மேய திரு ஆலங்காடனாரே. | [5] |
வீட்டினார் சுடு வெண் நீறு மெய்க்கு அணிந்திடுவர் போலும்; காட்டில் நின்று ஆடல் பேணும் கருத்தினை உடையர் போலும்; பாட்டின் ஆர் முழவம் ஓவாப் பைம்பொழில் பழனை மேயார் ஆட்டினார், அரவம் தன்னை;-ஆலங்காட்டு அடிகளாரே. | [6] |
தாள் உடைச் செங்கம(ல்)லத் தடங் கொள் சேவடியர் போலும்; நாள் உடைக் காலன் வீழ உதை செய்த நம்பர் போலும்; கோள் உடைப் பிறவி தீர்ப்பார்; குளிர் பொழில் பழனை மேய ஆள் உடை அண்ணல் போலும்-ஆலங்காட்டு அடிகளாரே. | [7] |
கூடினார், உமை தன்னோடே குறிப்பு உடை வேடம் கொண்டு சூடினார், கங்கையாளைச் சுவறிடு சடையர் போலும்; பாடினார், சாம வேதம்; பைம்பொழில் பழனை மேயார் ஆடினார், காளி காண; ஆலங்காட்டு அடிகளாரே. | [8] |
வெற்று அரைச் சமணரோடு விலை உடைக் கூறை போர்க்கும் ஒற்றரைச் சொற்கள் கொள்ளார் குணங்களை உகப்பர் போலும்; பெற்றமே உகந்து அங்கு ஏறும் பெருமையை உடையர் போலும்; அற்றங்கள் அறிவர் போலும் ஆலங்காட்டு அடிகளாரே. | [9] |
மத்தனாய் மலை எடுத்த அரக்கனைக் கரத்தோடு ஒல்க ஒத்தினார், திருவிர(ல்)லால் ஊன்றியிட்டு அருள்வர் போலும்; பத்தர் தம் பாவம் தீர்க்கும் பைம்பொழில் பழனை மேய அத்தனார்; நம்மை ஆள்வார் ஆலங்காட்டு அடிகளாரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.078  
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார்
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருவாலங்காடு (பழையனூர்) ; (திருத்தலம் அருள்தரு வண்டார்குழலியம்மை உடனுறை அருள்மிகு ஊர்த்ததாண்டவேசுவரர் திருவடிகள் போற்றி )
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே; ஊழி தோறு ஊழி உயர்ந்தார் தாமே; நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே; நீர், வளி, தீ, ஆகாசம், ஆனார் தாமே; கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே; கோலப் பழனை உடையார் தாமே; சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே. | [1] |
மலைமகளைப் பாகம் அமர்ந்தார் தாமே; வானோர் வணங்கப்படுவார் தாமே; சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே; சரண் என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே; பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; சிலை மலையா மூஎயிலும் அட்டார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே. | [2] |
ஆ உற்ற ஐந்தும் உகந்தார் தாமே; அளவு இல் பெருமை உடையார் தாமே; பூ உற்ற நாற்றம் ஆய் நின்றார் தாமே; புனிதப் பொருள் ஆகி நின்றார் தாமே; பா உற்ற பாடல் உகப்பார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; தே உற்று அடி பரவ நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே. | [3] |
நாறு பூங்கொன்றை முடியார் தாமே; நால்மறையோடு ஆறு அங்கம் சொன்னார் தாமே; மாறு இலா மேனி உடையார் தாமே; மா மதியம் செஞ்சடைமேல் வைத்தார் தாமே; பாறினார் வெண்தலையில் உண்டார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; தேறினார் சித்தத்து இருந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே. | [4] |
அல்லும் பகலும் ஆய் நின்றார் தாமே; அந்தியும் சந்தியும் ஆனார் தாமே; சொல்லும் பொருள் எலாம் ஆனார் தாமே; தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே; பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே. | [5] |
தொண்டு ஆய்ப் பணிவார்க்கு அணியார் தாமே; தூ நீறு அணியும் சுவண்டர் தாமே; தண் தாமரையானும் மாலும் தேட, தழல் உரு ஆய் ஓங்கி, நிமிர்ந்தார் தாமே; பண் தான் இசை பாட நின்றார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; திண்தோள்கள் எட்டும் உடையார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே. | [6] |
மை ஆரும் கண்டம்-மிடற்றார் தாமே; மயானத்தில் ஆடல் மகிழ்ந்தார் தாமே; ஐயாறும், ஆரூரும், ஆனைக்காவும், அம்பலமும், கோயிலாக் கொண்டார் தாமே; பை ஆடு அரவம் அசைத்தார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; செய்யாள் வழிபட நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே. | [7] |
விண் முழுதும் மண் முழுதும் ஆனார் தாமே; மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே; கண் விழியாக் காமனையும் காய்ந்தார் தாமே; காலங்கள், ஊழி, கடந்தார் தாமே; பண் இயலும் பாடல் உகப்பார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; திண் மழுவாள் ஏந்து கரத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே. | [8] |
கார் ஆர் கடல் நஞ்சை உண்டார் தாமே; கயிலை மலையை உடையார் தாமே; ஊர் ஆக ஏகம்பம் உகந்தார் தாமே; ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே; பாரார் புகழப்படுவார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; தீராத வல்வினை நோய் தீர்ப்பார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே. | [9] |
மாலைப் பிறை சென்னி வைத்தார் தாமே; வண் கயிலை மா மலையை வந்தியாத, நீலக் கடல் சூழ், இலங்கைக் கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே; பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே. | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.052  
முத்தா! முத்தி தர வல்ல
பண் - பழம்பஞ்சுரம் (திருத்தலம் திருவாலங்காடு (பழையனூர்) ; (திருத்தலம் அருள்தரு வண்டார்குழலியம்மை உடனுறை அருள்மிகு ஊர்த்துவதாண்டவேசுவரர் திருவடிகள் போற்றி )
முத்தா! முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை பங்கா! சித்தா! சித்தித் திறம் காட்டும் சிவனே! தேவர் சிங்கமே! பத்தா! பத்தர் பலர் போற்றும் பரமா! பழையனூர் மேய அத்தா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே. | [1] |
பொய்யே செய்து புறம் புறமே திரிவேன் தன்னைப் போகாமே, மெய்யே வந்து இங்கு எனை ஆண்ட மெய்யா! மெய்யர் மெய்ப்பொருளே! பை ஆடு அரவம் அரைக்கு அசைத்த பரமா! பழையனூர் மேய ஐயா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே. | [2] |
தூண்டா விளக்கின் நற்சோதீ! தொழுவார் தங்கள் துயர் தீர்ப்பாய்! பூண்டாய், எலும்பை! புரம் மூன்றும் பொடியாச் செற்ற புண்ணியனே! பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா! பழையனூர் மேய ஆண்டா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே. | [3] |
மறி நேர் ஒண் கண் மட நல்லார் வலையில் பட்டு, மதி மயங்கி, அறிவே அழிந்தேன், ஐயா, நான்! மை ஆர் கண்டம் உடையானே! பறியா வினைகள் அவை தீர்க்கும் பரமா! பழையனூர் மேய அறிவே! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே. | [4] |
வேல் அங்கு ஆடு தடங்கண்ணார் வளையுள் பட்டு, உன் நெறி மறந்து, மால் அங்கு ஆடி, மறந்தொழிந்தேன்; மணியே! முத்தே! மரகதமே! பால் அங்கு ஆடீ! நெய் ஆடீ! படர் புன்சடையாய்! பழையனூர் ஆலங்காடா! உன்னுடைய அடியார்க்கு அடியேன் ஆவேனே. | [5] |
எண்ணார் தங்கள் எயில் எய்த எந்தாய்! எந்தை பெருமானே! கண் ஆய் உலகம் காக்கின்ற கருத்தா! திருத்தல் ஆகாதாய்! பண் ஆர் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் அண்ணா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே. | [6] |
வண்டு ஆர் குழலி உமை நங்கை பங்கா! கங்கை மணவாளா! விண்டார் புரங்கள் எரி செய்த விடையாய்! வேத நெறியானே! பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா! பழையனூர் மேய அண்டா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே. | [7] |
பேழ்வாய் அரவின் அணையானும், பெரிய மலர் மேல் உறைவானும் தாழாது, உன் தன் சரண் பணிய, தழல் ஆய் நின்ற தத்துவனே! பாழ் ஆம் வினைகள் அவை தீர்க்கும் பரமா! பழையனூர் தன்னை ஆள்வாய்! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே. | [8] |
எம்மான்! எந்தை! மூத்த(அ)ப்பன்! ஏழ் ஏழ் படிகால் எமை ஆண்ட பெம்மான்! ஈமப் புறங்காட்டில் பேயோடு ஆடல் புரிவானே! பல் மா மலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் அம்மா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே. | [9] |
பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன், பழையனூர் மேய அத்தன், ஆலங்காடன் தன் அடிமைத் திறமே அன்பு ஆகிச் சித்தர் சித்தம் வைத்த புகழ்ச் சிறுவன் ஊரன் ஒண் தமிழ்கள்- பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே. | [10] |